திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கனமழை காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியதால், நோயாளிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதுக்குள்ளாயினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்பலூர், இராமநாயக்கன்பேட்டை, நெக்குந்தி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இன்று (மே 17) சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது.
இதில், வாணியம்பாடியில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயளிகள் பிரிவு மற்றும் அவரச சிகிச்சை பிரிவு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கியது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது, மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.