சென்னை: திருமுல்லைவாயில் அருள்மிகு ஸ்ரீபிடாரி எட்டியம்மன் ஆலயத்தில் உற்சவ புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில், மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீபிடாரி எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், கடந்த 60 ஆண்டுகளாக முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று (மே 29) ஸ்ரீ பிடாரி எட்டியம்மன் உற்சவ புறப்பாடு நிகழ்ச்சி, கிராம மக்கள் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், திருமுல்லைவாயில் பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் ஆலயத்தில் புறப்பட்ட சாமி, ஸ்ரீ பிடாரி எட்டியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதனையடுத்து, பிடாரி எட்டியம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு உற்சாக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், எட்டியம்மன் நகர் வீதிகளில் ஊர்வலம் வந்தது. அங்கு, திருமுல்லைவாயில் காலனி பகுதியில் ஆடு பலி கொடுத்து, அம்மனுக்கு அசைவ கும்ப படையலிட்டு கிராம பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.