சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நாய்களுக்கான வாக்கதான் (WALKATHON) போட்டி நடைபெற்றது. நாய் வளர்ப்பு, தெருவில் ஆதரவின்றி விடப்படும் நாய்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த வாக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
பெப்ஹன்ட்ஸ் (PEPHAND) அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த நாய்கள் வாக்கத்தான் ’லயனஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. நிகழ்ச்சியின் போது நாய்கள் டீ சர்ட், பேண்ட், தொப்பி, ஏஞ்சல் உடை, மணமகள் உடை என பல்வேறு வகையான வண்ண உடைகளை அணிந்து கொண்டு வாக்கதான் போட்டியில் பங்கேற்றன.
நிகழ்ச்சியில் வெளிநாட்டு ரக நாய்களான லேப்ரோடாக், புல்லிகுட்டான், ஷிட்ஷூ, பாக்சர், கோல்டன் ரிட்ரீவர், பாடுல் மற்றும் இந்திய ரகத்தை சேர்ந்த சிப்பிபாரை,கன்னி, ராஜபாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுடன் செல்லப்பிராணி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர்.
இது தவிர ஆதரவற்ற நாய்களை பார்வையிட வந்த நாய் பிரியர்கள் பலரும் தத்தெடுத்து சென்றனர். இதேபோன்று பூனைகளும் கொண்டு வரப்பட்டு அவைகளும் தத்தெடுத்து செல்லப்பட்டன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்களும், உலக சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சான்ஸ் விலங்கு அறக்கட்டளையை நிறுவனா் சுதா, “ இதுபோன்ற நிகழ்ச்சி நாய் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. தெரு நாய்களுக்கு கூடாரம் அமைத்து தரும் நல்ல நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.