கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் அருகில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு கரடி, சிறுத்தை, புள்ளிமான்கள், புலி, காட்டு எருமை, யானை போன்ற விலங்குகள் அதிகமாக உள்ளன. புலிகள் காப்பகம் அமைந்திருக்கும் பகுதி இரவு நேரங்களில் வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ஆதலால் கேரளா வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் நலன் கருதி பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கேரளா வனத்துறையினர், வாகன ஏற்பாடு செய்து அடர் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் இருக்கும் இடத்தை காண்பித்து வருகின்றனர். கடந்து சில தினங்களாக இப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
பரம்பிக்குளம் ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை கூட்டம் தண்ணீர் அருந்த வந்துள்ளது. அப்போது வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை புலி குட்டி யானைகளை நோக்கி சென்றுள்ளது. இதைக் கண்ட தாய் யானை, பிளிறியவாறு புலியை துரத்தியது. இதனை வீடியோ எடுத்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.