Surprise Me!

தெருவில் உலா வந்த நல்ல பாம்பு! லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்ட அதிகாரிகள்!

2025-06-05 26 Dailymotion

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவ்வப்போது குழந்தைகள் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை தெருக்களில் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சங்கரப்பேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியின் 3-ஆவது தெருவில் ஏழு அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் சிலர் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தூத்துக்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தனர்.

தொடர்ந்து அந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை வல்லநாடு மலைப்பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். மேலும், இதுபோன்ற பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வரும் பட்சத்தில் மக்கள் பாம்பை அடித்துவிடாமல், தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.