நீலகிரி: கூடலூர் மசினகுடி அருகே உள்ள மாயார் பாலமானது சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி வனவலயங்களை இணைக்கும் முக்கியமான வனப்பகுதியாகும். இங்கு இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அவ்வப்போது வனவிலங்குகள் விபத்துக்குள்ளாவதும் உண்டு.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் சாலை கடக்க முயன்ற குட்டி மானை வேட்டையாடி புலி ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற கிராமவாசி ஒருவர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார். தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உணவு சங்கிலி, உணவு வலை என சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை சாப்பிடுகிறது என்பதை நாம் அறிவோம். அதனை இந்த வீடியோ எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், “இது காட்டில் இயற்கையாக நடைபெறும் வேட்டைக் காட்சியாகும். இரவு, பகல் நேரங்களில் மாயார் பாலம் பகுதியில் வாகனங்களில் சாலையை கடக்கும்போது, விலங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து மெதுவாக செல்ல செல்ல வேண்டும்.
மேலும் வனவிலங்குகளை கண்டவுடன் அருகே சென்று வீடியோ பதிவு செய்வது, வாகனங்களில் அதிக ஒளி எழுப்புவது மற்றும் வனவிலங்குகளை பொருட்களைக் கொண்டு தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்றார்.