தேனி: இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே சன்னி என்பவருக்கு சொந்தமாக ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூன் 9) அந்த தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத 15 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இருந்து புலி உறுமல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்ட தோட்ட உரிமையாளர், கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, உள்ளே ஒரு புலி மற்றும் நாய் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட உரிமையாளர், உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், விரைந்து வந்த வனத்துறையினர் புலி மற்றும் நாய்க்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தோட்டத்திற்குள் நுழைந்த புலி நாயினை விரட்டிச் சென்றபோது, 15 ஆழ மொட்டை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம். மேலும், குழிக்குள் இருந்த புலி அச்சத்தில் இருந்ததால் நாயினை எதுவும் செய்யாமல் இருந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மீட்கப்பட்ட மூன்று வயது ஆண் புலியை கூண்டில் அடைத்த வனத்துறையினர், மருத்துவ பரிசோதனைக்காக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், புலி ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த புலியை அடர் வனப்பகுதியில் விட தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி, நேற்று இரவு புலியை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்ற வனத்துறையினர், தேக்கடி பெரியார் புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் திறந்து விட்டனர். கூண்டைத் திறந்ததும் புலி துள்ளிக்குதித்து காட்டுக்குள் சென்றது. தற்போது, இதுதொடர்பான காணொளியை தேக்கடி புலிகள் காப்பக வன அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.