தேனி: குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருந்த தோட்டத்திற்குள், சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்த சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் களை எடுக்கும் பணிக்காக தொழிலாளர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், இன்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது கர்ணன் என்பவர் பணிபுரிந்த இடத்தில் 20 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று புல்வெளிக்குள் இருந்தது தெரியவந்துள்ளது.
அதனைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், அரவிந்த் கம்பம் தெற்கு வனச்சரக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வனவர் வினோத் தலைமையிலான வனத்துறையினர், 20 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
மேலும், தேனியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால், பாம்புகள் போன்ற விஷ பூச்சிகள் வெளியே வரும். ஆகையால், பொதுமக்கள் மற்றும் தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.